Last Updated : 19 Dec, 2020 11:52 AM

 

Published : 19 Dec 2020 11:52 AM
Last Updated : 19 Dec 2020 11:52 AM

தலித்துகள், பழங்குடியினருக்காக தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்: உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா கடிதம்

சோனியா காந்தி | கோப்புப் படம்.

மும்பை

தலித்துகள், பழங்குடியினருக்காகத் தொழில், வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி அரசாங்கத்தை உருவாக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளுடன் இணைந்து யாரும் எதிர்பாராத ஒரு கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கியது.

அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதும் கடிதம் இது. மகாராஷ்டிராவில் நடைபெறவிருக்கும் கிராம பஞ்சாயத்து தேர்தல்களைக் கருத்தில் கொண்டும் இந்தக் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

''தங்கள் தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசாங்கம் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை (Common Minimum Program) உயிர்ப்போடு செயல்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அதன்படி அரசாங்க ஒப்பந்தங்களில், எஸ்சி / எஸ்டி தொழில் வல்லுநர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அவர்களிடையே தொழில்முனைவோரைத் தங்கள் அரசு மேம்படுத்த வேண்டும். பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் வளர்ச்சிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மக்கள்தொகையில் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும்.

பின்தங்கியுள்ள இந்தச் சமூகங்களை விரைவாக மற்ற சமூகங்களுடன் இணையாகக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசுத் துறைகளில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு இந்த நிதியாண்டிலேயே சட்டப்பேரவையின் ஆதரவுடன் எஸ்சி / எஸ்டி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்''.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x