Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

புதுடெல்லி

காங்கிரஸின் அதிருப்தி தலைவர்களுடன் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்காவும் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். சோனியா காந்தி காங்கிரஸின் இடைக்காலத் தலைவரானார். பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸின் தொடர் தோல்வி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகியதால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது போன்றவற்றால் கட்சித் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் குரல் எழுப்பினர்.

கட்சியை பலப்படுத்த முழுநேரத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதில் மூத்த தலைவர்கள் கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 23 தலைவர்கள் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் பிஹார் தேர்தல் தோல்விக்கு பின்னர், காங்கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கபில் சிபல் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், அதிருப்தி தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திஇன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் ராகுல் மற்றும்பிரியங்காவும் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதால் மெஜாரிட்டி இழந்து ம.பி. முதல்வர் பதவியை இழந்த கமல்நாத் இந்தக் கூட்டத்துக்காக சோனியாவை சம்மதிக்க வைப்பதில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x