Last Updated : 18 Dec, 2020 11:17 AM

 

Published : 18 Dec 2020 11:17 AM
Last Updated : 18 Dec 2020 11:17 AM

மூன்று ஏக்கர் காலிஃபிளவர் பயிர்கள் அழிப்பு: 1 கிலோ 1 ரூபாய்க்கு கேட்டதால் உ.பி. விவசாயி வேதனை

குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் வேளையில் 1 கிலோ 1 ரூபாய்க்கு கேட்டதால் வேதனை அடைந்த விவசாயி மூன்று ஏக்கர் காலிஃபிளவர் பயிர்களை டிராக்டர் வைத்து அழித்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது.

காய்கறிகளைப் பயிரிடும் விவசாயிகள் அதற்கான உரிய விலை கிடைக்காதபோது மனமுடைந்துவிடுகின்றனர். இதனால் தான் உழுது பயிரிட்டு காத்து வந்த பயிர்களை அழித்துவிடும் நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.

டெல்லியில் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு விவசாயிகள் போராடி வரும் வேளையில் உத்தரப் பிரதேசத்தில் காலிபிளவர் விவசாயி ஒருவர் மிகவும் மோசமான விலைக்கு தனது விளைபொருளை கேட்டதால் தனது மூன்று ஏக்கர் காலிபிளவர் தோட்டத்தையே அழித்துள்ளார்.

இதுகுறித்து ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

கடந்த மூன்று மாத காலமாக கண்ணும் கருத்துமாய் கவனித்து பயிரிட்ட காலிபிளவர் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. தற்போது பூத்துக்குலுங்கும் இப்பயிரின் மதிப்பு ஒரு லட்சமாகும்.

ஆனால் சந்தையில் தற்போது விலைவீழ்ச்சி கடுமையாகியுள்ள காரணத்தால் மிகவும் மோசமான விலைக்கு கேட்டடதுதான் இந்த முடிவுக்கு காரணம். அதாவது ஒரு கிலோ காலிபிளவர் 1 ரூபாய்க்கு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இது பயிருக்கு ஆன செலவில் பலமடங்கு கீழே உள்ளது. அரசாங்கம் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்.

ஆனால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்களின் போராட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்குகிறேன்.

இவ்வாறு விவசாயி ரமேஷ் தெரிவிததார்.

அதிகாரிகள் நேரில் ஆய்வு: ஆட்சியர் அறிவிப்பு

காலிபிளவர் தோட்டத்தை விவசாயி அழித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் கவுர் கூறுகையில், "மாயாபுரி கிராமத்தில் ஒரு விவசாயி தனது காலிஃபிளவர் பயிரை அழித்தது குறித்து எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அவரை விவசாய அதிகாரிகள் மற்றும் உதவிஆட்சியர் அவரை சந்திப்பார்கள். தோட்டக்கலை அதிகாரிகள் மற்றும் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் விவசாயியை சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கைக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். ”என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x