

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் நேற்று 22-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக சிங்கு, திக்ரி, காஜிபூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லியில் நுழைய லம்பூர், சோபியாபாத் உள்ளிட்ட மாற்றுப் பாதைகளை பொதுமக்கள் பயன்படுத்தினர். எனினும் மாற்றுப் பாதைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விவசாயி உயிரிழப்பு
டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக 37 வயது விவசாயி நேற்று உயிரிழந்தார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். டெல்லி போராட்டத்தில் இதுவரை 20 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஹரியாணாவின் கர்னால் பகுதியை சேர்ந்த சீக்கிய மதக் குரு பாபா ராம் சிங் கடந்த புதன்கிழமை டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கு கர்னால் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில் வரும் 22-ம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
இதனிடையே மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்கங்களுக்கு நேற்று ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:
புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
சில விவசாய சங்கங்கள் மட்டுமே வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றன. ரயில்வே தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக எல்லையில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது வீரர்களுக்கு உணவு பொருட்களை அனுப்ப முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா ஆலோசனை
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியபோது, "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 9 மாதங்கள் போராடினார். அதன்பிறகு அந்த சட்டங்களை ஆங்கிலேய அரசு வாபஸ் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆங்கிலேயர் ஆட்சியைவிட மோசமாக நடந்து கொள்கிறது. கடும் குளிரில் விவசாயிகள் போராடுகின்றனர். இதுவரை 20 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்" என்று குற்றம் சாட்டினார். மேலும் புதிய வேளாண் சட்டங்களின் நகல்களை முதல்வர் கேஜ்ரிவால், சட்டப்பேரவையில் கிழித்து எறிந்தார்.