Last Updated : 17 Dec, 2020 02:45 PM

 

Published : 17 Dec 2020 02:45 PM
Last Updated : 17 Dec 2020 02:45 PM

மருத்துவர் கஃபீல்கான் மீது பாய்ந்த என்எஸ்ஏ சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவு சரியானது: உ.பி. அரசின் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் : கோப்புப்படம்

புதுடெல்லி

உத்தரப் பிரதேச கோரக்பூர் மருத்துவர் கஃபீல்கானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்டவிரோதம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

கஃபீல்கானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்டவிரோதம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உ.பி. அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடும் வகையில் மருத்துவர் கஃபீல்கான் பேசியதாகக் குற்றம் சாட்டி, அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உ.பி. அரசு கைது செய்தது.

இதனால் கடந்த ஜனவரி 29-ம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்ட கஃபீல்கான் அலிகர் அழைத்து வரப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் மீது தொடக்கத்தில் ஐபிசி 153ஏ பிரிவில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்பின் ஐபிசி 153பி மற்றும் 505 (2) ஆகியவை சேர்க்கப்பட்டன.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அலிகர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், 13-ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கஃபீல்கானை உ.பி. அரசு கைது செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் கஃபீல்கான் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவை கஃபீல்கானின் தாய் நுஷ்ரத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அடுத்த 15 நாட்களில் முடிவெடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம், அடுத்த 10 நாட்களுக்குள் பதில் அளிக்கக் கோரி உ.பி. அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கஃபீல்கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி உ.பி. அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

இந்தச் சூழலில் மருத்துவர் கஃபீல்கானின் தாய் நுஷ்ரத் கான் தாக்கல் செய்திருந்த மனு அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், கோவிந்த் மாத்தூர், சவுமித்ரா தயால் சிங் ஆகியோர் முன் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி விசாரிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “மருத்துவர் கஃபீல்கான் மீத தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சட்டவிரோதம். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மருத்துவர் கஃபீல்கான் பேசியது குறித்து அதிகாரிகள் தாக்கல் செய்த ஆவணங்களைப் பார்த்தோம். அதில் அவர் எந்தவிதமான வன்முறையைத் தூண்டும் விதத்திலோ, வெறுப்பை விதிக்கும் விதத்திலோ பேசவில்லை. அலிகர் நகரின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரின் பேச்சு அமையவில்லை” எனத் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றம், மருத்துவர் கஃபீல்கான் மீதான என்எஸ்ஏ சட்டத்தை ரத்து செய்து, விடுவித்ததற்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “செப்டம்பர் 1-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நல்ல தீர்ப்புதான். அந்தத் தீர்ப்பில் நாங்களை தலையிடமாட்டோம். அந்தத் தீர்ப்பு எந்தவிதமான மற்ற விசாரணைகளையும் பாதிக்காது, தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆதலால், உ.பி. அரசின் மனுக்களை விசாரிக்க முடியாது” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x