

நிலுவைத் தொகை பெறாத கரும்பு விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு 3,500 கோடி மானியம் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு இது சிறப்புமிக்க மகிழ்ச்சி அளிக்கும் நாள் என்று பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் கடந்த சந்தைப்படுத்தல் ஆண்டில் கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகளுக்கான பணத்தைத் தரமுடியாமல் நிலுவை வைத்துள்ளன. அதனால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாவதையும் கருத்தில் கொண்டு கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் சர்க்கரை ஆலைகளுக்கு அரசாங்கம் மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகையை தரஇயலாத நிலையில் உள்ளன. நிலுவைத் தொகை பெறாத விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கிட அரசாங்கம் முன் வந்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2020-21 நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் சர்க்கரை ஆலைகள் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான மானியத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு 3,500 கோடி ரூபாய் மானியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஐந்து கோடி கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தரும் நாள் இது.
விவசாயிகளின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக வழங்கப்படும் இத்தொகை நேரடியாக அவர்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும். இந்த சர்க்கரை ஆலைகளுடன் தொடர்புடைய லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இது உதவும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.