Published : 17 Dec 2020 08:03 AM
Last Updated : 17 Dec 2020 08:03 AM

இந்தியாவின் தேசிய கல்வி கொள்கை தொலைநோக்கு கொண்டது: இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பாராட்டு

புதுடெல்லி

இந்தியாவின் தேசிய கல்வி கொள்கை தொலைநோக்குடன் உள்ளதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், பாராட்டியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்-ஐ இன்று சந்தித்து இருதரப்பு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளபட்டது.

இந்தியாவின் தேசிய கல்வி கொள்கை 2020, தொலைநோக்குடன் உள்ளதாக டொமினிக் ராப் கூறினார். இதில் கூறப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மாணவர்களுக்கும், பொருளாதாரத்துக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் எனவும், இரு நாடுகள் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2018-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்றபோது, ‘கல்வி தான் இரு நாடுகள் இடையேயான இணைப்பு பாலம்’ என குறிப்பிட்டதை நினைவு கூர்ந்த திரு டொமினிக் ராப், இந்த புதிய கல்வி கொள்கை இந்தியா-இங்கிலாந்து இடையேயான இணைப்பு பாலத்தை வலுப்படுத்தும் என்றார். வெளிநாட்டு மாணவர்களின் வருகைக்காக, விசா மற்றும் குடியுரிமை நடைமுறைகளில் பல மாற்றங்கள் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரு நாட்டு உயர் கல்வி நிறுவனங்களும், தங்களின் கல்வி தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிக்கும் வகையில் கூட்டு பணிக் குழுவை உருவாக்க இந்தியாவும், இங்கிலாந்தும் ஒப்புக் கொண்டன.

இந்த நடவடிக்கை, உயர்கல்வியை சர்வதேசமயமாக்கும் இந்தியாவின் கொள்கைக்கு உதவும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x