Last Updated : 16 Dec, 2020 05:16 PM

 

Published : 16 Dec 2020 05:16 PM
Last Updated : 16 Dec 2020 05:16 PM

என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது; உங்கள் கட்சியினரே பாஜகவில் சேர்கிறார்கள்: மம்தா பானர்ஜிக்கு ஒவைசி பதிலடி

இன்றுவரை ஒவைசியைப் பணத்தால் விலைக்கு வாங்க யாராலும் முடியாது. திரிணமூல் கட்சியைச் சேர்ந்தவர்களைப் பாஜகவின் பக்கம் சேரும் நிலையைக் கண்டு மம்தாதான் வருத்தப்பட வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணமூல் காங்கிரஸ் போராடி வருகிறது.

முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. மற்றொரு புறம் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைக்கப் பேசி வருகின்றனர்.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.

தேர்தல் தொடர்பான நேற்றைய பொதுக்கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசும்போது, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசியை பாஜகவின் பி டீம் என்றும், பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

மம்தா பானர்ஜி பேசுகையில், “ஹைதராபாத்திலிருந்து ஒரு கட்சியை மேற்கு வங்கத்தில் போட்டியிட வைக்க பாஜக முயல்கிறது. மேற்கு வங்கத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குகளைப் பிரிக்க முயல்கிறார்கள். இதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்சிக்கு பாஜக கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது” என ஒவைசியை மறைமுகமாகச் சாடினார்.

மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு அசாசுதீன் ஒவைசி இன்று பதில் அளித்துள்ளார். ஒவைசி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இன்றைய தேதிவரை பணத்தால் ஒவைசியை வாங்குவதற்கு யாரும் இல்லை. மம்தாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவர் மன அமைதியின்றி இருக்கிறார்.

மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் பாஜக பக்கம் போய்ச் சேரும்போது அவர் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும். பிஹார் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். ஆனால், பிஹார் மக்களைத் தரக்குறைவாகப் பேசியதற்கு மம்தா மன்னிப்பு கோர வேண்டும்.

இப்போதுவரை நீங்கள் உங்களுக்குக் கட்டுப்பட்ட மிர் ஜாபர், சாதிக்கை மட்டும்தான் கவனித்து வந்தீர்கள். முஸ்லிம்களுக்காகப் பேசும், சிந்திக்கும் முஸ்லிம்களை நீங்கள் விரும்பமாட்டீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மம்தா பானர்ஜி இருந்தபோது, அவரும் பாஜகவைப் புகழ்ந்து பேசியுள்ளார் என்பதை மறந்துவிட்டுப் பேசக்கூடாது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x