Published : 16 Dec 2020 10:04 AM
Last Updated : 16 Dec 2020 10:04 AM

குழந்தைகளுக்கான நுண் ஊட்டச்சத்து: விவரங்கள் வெளியீடு

புதுடெல்லி

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முதல் கட்டமாக 22 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு 2019-20 ஆம் ஆண்டுக்கான‌ ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பை கடந்த 12-ஆம் தேதி வெளியிட்டார்.

மக்கள் தொகை, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலன், குடும்ப நலன், ஊட்டச்சத்து இதர முக்கிய குறிப்பீடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mohfw.gov.in ) வெளியிடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஆந்திரப் பிரதேசம், அசாம், பிகார், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 22 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் இதில் அடங்கும். மீதமுள்ள 14 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் களப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதாரம் குடும்ப நலன் மற்றும் இதர வளர்ந்து வரும் விஷயங்களில் நம்பகத்தன்மையான மற்றும் ஒப்பிடக்கூடிய தரவு விவரங்களை வழங்குவதே இந்த தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும். இதுவரை இந்தியாவில் 4 சுகாதார கணக்கெடுப்புகள் (1992-93, 1998-99, 2005-06, 2015-16) வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஐந்தாவது கணக்கெடுப்பில், அதற்கு முந்தைய கணக்கெடுப்பின் குறிப்பீடுகள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. எனினும் புதிதாக, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் நுண் ஊட்டச்சத்து அம்சங்கள், மாதவிடாய் சுகாதாரம், மது மற்றும் புகையிலை பயன்பாடு, தொற்று ஏற்படாத நோய்களின் கூடுதல் அம்சங்கள், 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் முதலியவற்றை கண்டறிதல் போன்ற குறிப்பீடுகளின் மூலம் பெறப்படும் தகவல்கள் ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களை வலுப்படுத்தவும், கொள்கைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x