Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM

ஆந்திராவின் நிரந்தர தலைநகர் அமராவதி: மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு உறுதி

அமராவதி: தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திரவுக்கு அமராவதியை தலைநகரமாக முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கினர். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானதும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் இருத்தல் அவசியம் என தீர்மானித்து, அமராவதி உட்பட கர்னூல் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம் இருக்கும் எனவும், அமராவதியில் சட்டப்பேரவை செயல்படும் எனவும், கர்னூலில் உயர் நீதிமன்றம் அமைக்கப்படுமெனவும் முதல்வர் ஜெகன் அறிவித்தார்.

இதுகுறித்து அமைச்சரவையிலும் அதன் பின்னர் சட்டப்பேரவையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றும்போது எதிர்க்கட்சியினரின் அமளியால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆந்திர அரசின் இந்தத் திட்டத்தை தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக, ஜனசேனா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருடமாக போராடி வருகின்றனர். இதற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து, அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டும் வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் சோமு வீரராஜு அமராவதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "அமராவதிதான் ஆந்திராவின் நிரந்தர தலைநகரம். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது. அமராவதியைச் சுற்றிலும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசுதான் செய்து வருகிறது. ஒருவேளை வேறு இடத்திற்கு தலைநகரை ஜெகன் அரசு மாற்றினாலும், மத்திய அரசின் அலுவலகங்கள் இங்குதான் இயங்கும். பிரதமர் மோடி சார்பில் நான் வாக்களிக்கிறேன். அமராவதிதான் ஆந்திராவின் தலைநகரம். இதில் சந்தேகம் வேண்டாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x