Published : 15 Dec 2020 06:59 AM
Last Updated : 15 Dec 2020 06:59 AM

10 லட்சம் ஆலோசனைகளை வழங்கிய இ-சஞ்ஜீவனி: தமிழகம் தொடர்ந்து முதலிடம்

புதுடெல்லி

இ-சஞ்ஜீவனி தொலை தொடர்பு மருத்துவ சேவை, ஆலோசனை வழங்குவதில் 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்துவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இணையதளம் மூலம் வழங்கப்படும் தொலை தொடர்பு மருத்துவ சேவை, சுகாதார சேவைகளின் அளவை மட்டும் விரிவுபடுத்தாமல், சுகாதார சேவைகளின் தரத்தையும் மேம்படுத்தி, பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. இ-சஞ்ஜீவனி என்ற பெயரில், இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தொலை தொடர்பு மருத்துவ சேவை வழங்கப்பட்டது. கொவிட்-19 நேரத்தில், மக்கள் வெளியே செல்ல முடியாத நேரத்தில் இத்திட்டம், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. டிஜிட்டல் சுகாதார சூழலையும் ஊக்குவித்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இ-சஞ்ஜீவனி திட்டம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பயன் அளிக்கிறது. இ-சஞ்சீவனி ஏபி-எச்டபிள்யூசி திட்டம் மருத்துவர்கள் இடையேயான ஆலோசனையை வழங்குகிறது. இதன் மூலம் 240 இடங்களில் உள்ள 6 ஆயிரம் மருத்துவமனைகளுக்கு, மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

இ-சஞ்சீவனி ஓபிடி பிரிவு, வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கு தொலை தொடர்பு மருத்து ஆலோசனைகளை வழங்குகிறது. இதில் ஆலோசனை வழங்க 8,000 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 14,000 பேர் இ-சஞ்சீவனி மூலம் மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர்.

நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இ-சஞ்சீவனியை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 10 சதவீதம் பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். 4ல் ஒரு பங்கு நோயாளிகள், ஒன்றுக்கு மேற்பட்ட முறை, இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர். இது தொலை தொடர்பு மருத்துவ சேவையை, மக்கள் விரும்புவதை காட்டுகிறது.

கேரளாவில், பாலக்காடு சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதார சேவைகள் வழங்க இ-சஞ்சீவனி பயன்படுத்தப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்திலும் இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது.

நாட்டில் உள்ள 10 மாநிலங்கள் இ-சஞ்ஜீவனி ஓபிடி சேவையை அதிகம் பயன்படுத்துகின்றன. அதில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்திலிருந்து இதுவரை 3,19,507 மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. 2வது இடத்தில் உள்ள உத்தரப் பிரதேசம் 2,68,889 ஆலோசனைகளை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம் 79,838 ஆலோசனைகளை பெற்றுள்ளது.

இ-சஞ்ஜீவனி் தொலை தொடர்பு மருத்துவ சேவை, ஆலோசனை வழங்குவதில் 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x