Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் சீனாவின் அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் முதலீட்டாளர்கள்

கடன் நெருக்கடியில் இருக்கும் சீன அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அறிக்கைபடி, சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் 6.1 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு வழங்க வேண்டிய முதிர்வுத் தொகையை வழங்க தவறிவிட்டன. அந்த நிறுவனங்கள் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. சீன அரசும் அந்த நிறுவனங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்பதால் நம்பிக்கை இழந்துள்ளதாக முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சீன நிறுவனங்கள் 4 லட்சம் கோடி டாலர் அளவில் கடன் நெருக்கடியில் இருப்பதாகவும், இவற்றில் பாதிக்கும் மேலான கடன், சீன அரசு நிறுவனங்களின் கடன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இருபதுக்கும் மேலான நிறுவனங்கள் புதிதாக திரட்ட இருந்த 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிடுவதையும் நிறுத்தி வைத்துள்ளன.

இதனால் உள்நாட்டு பங்கு வர்த்தகம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் சீன நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் பாதித்துள்ளது. நெருக்கடி காலங்களில் சீன அரசு முன்வந்து உதவும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் சீன அரசு நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய முன்வருகிறோம் ஆனால், தற்போது கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிறுவனங்களுக்கு அரசு உதவுவதாக தெரியவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நல்ல ரேட்டிங் மற்றும் நிதிநிலை கொண்டதாக நினைத்த நிறுவனங்களின் நிலை இப்படி எனில், இனி எப்படி நம்பி முதலீடு செய்ய முடியும் என்று முதலீட்டாளர்கள் கோபமாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x