

பிரதமர் மோடி தலைமையிலான அரசு சீக்கியர்களுக்கு செய்த நலத்திட்டங்கள் அடங்கிய புத்தக பிரதி ஐஆர்சிடிசி சார்பில் பஞ்சாப் விவசாயிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடக்கத்தில் அவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். இதன் காரணமாக ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
ரயில்வே, பஞ்சாப் அரசின் கோரிக்கையை ஏற்று ரயில் மறியல் போாட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில் மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு மத்திய தகவல், ஒலிபரப்பு துறை சார்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசின் சீக்கியர்களுடனான சிறப்பு உறவு' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தின் மின்னணு பிரதியை இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), பஞ்சாப் விவசாயிகளுக்கு இ-மெயில் மூலமாக அனுப்பி வருகிறது.
47 பக்கங்கள் கொண்ட இந்தபிரதி இந்தி, பஞ்சாபி, ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் சீக்கியர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங் கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பஞ்சாபின் அமிர்தசரஸிஸ் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு வழங்கப்பட்ட எப்சிஆர்ஏ பதிவு, குருத்வாராக்களில் வழங்கப்படும் இலவச உணவுக்கு வரிவிலக்கு, கர்தாபூர் வழித்தடம், குருநானக் குறித்த ஆராய்ச்சிக்கு நிதியுதவி, சீக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்தது, ஜாலியன் வாலாபாக்கில் நினைவிடம், சீக்கிய இளைஞர்களுக்கான நலத்திட்டங்கள் என 13 வகையான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஐஆர்சிடிசி தலைமை செய்தித் தொடர்பாளர் சித்தார்த் சிங் கூறும்போது, "சிங் என்ற அடைமொழி கொண்டவர்களுக்கு இ-மெயில் மூலமாக பிரதமர் குறித்த புத்தக பிரதியை அனுப்பி வருகிறோம்" என்றார்.
ஐஆர்சிடிசி-யின் நடவடிக்கைக்கு சமூக வலைதளவாசிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். ஜே.பி.சிங் என்பவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கட்சியின் பிரச்சாரத்துக்குஐஆர்சிடிசி-யை பயன்படுத்துவது ஏன்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோல பலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.