Last Updated : 13 Dec, 2020 05:52 PM

 

Published : 13 Dec 2020 05:52 PM
Last Updated : 13 Dec 2020 05:52 PM

ஒடிசா: ஒரு பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

பிரதிநிதித்துவப் படம்.

புவனேஸ்வர்

ஒடிசாவில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் இன்று 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தலைவர் அபய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஒடிசாவில் மல்கன்கிரி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான ஸ்வாபிமான் அஞ்சலின் கஜல்மமுடி பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்த தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சிறப்புப் பாதுகாப்புப் படையினர் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை அப்பகுதிக்கு விரைந்தனர்.

அப்போது மாவோயிஸ்டுகள் மறைந்திருந்து பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதனைத் தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் மாவோயிஸ்டுகள் இருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெண் மாவோயிஸ்ட். கொல்லப்பட்ட இன்னொரு மாவோயிஸ்ட்டின் பெயர் டி.ரமேஷ்,

சிறப்புp பாதுகாப்புப் படையினர், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் மாவோயிஸ்டுகளின் சில பொருட்களை சம்பவ இடத்திலிருந்து மீட்டுள்ளனர்.

ஸ்வாபிமான் அஞ்சல் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவிக்க மாநில அரசு உறுதி பூண்டுள்ளது, அவர்களை உடனடியாகச் சரணடையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு அபய் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 11-ம் தேதி காந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார்.

இதேபோன்று மத்தியப் பிரதேசத்தில் டிசம்பர் 11 இரவு மற்றும் டிசம்பர் 12 காலையில் போலீஸாருடன் தனித்தனியாக நடந்த மோதல்களில் இரு பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x