Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாத உண்டியல் வருமானம் ரூ.61 கோடி

திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் பக்தர்கள் உண்டியலில் ரூ.61.29 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி கலந்துகொண்டு பக்தர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம். குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகளும் கரோனா நிபந்தனைகளைபின்பற்றி சுவாமியை தரிசிக்கலாம்.

சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறும் 10 நாட்களிலும் 20 ஆயிரம் பேர் ரூ.300 செலுத்தி முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம். இதுதவிர, திருப்பதியில் 10 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இதற்காக 50 மையங்களை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் விஷ்ணு நிவாசம், மாதவம், நிவாசம் ஆகிய தேவஸ்தான தங்கும் விடுதிகள் வரும் 15-ம் தேதி முதல் திறக்கப்படுகின்றன..

கடந்த நவம்பர் மாதத்தில் 8.47 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.61.29 கோடி காணிக்கை செலுத்தினர். மேலும் இ-உண்டி மூலம் ரூ.3.75 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 50.04 லட்சம் லட்டுபிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2.92 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி யுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x