Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கர்னல் பிரிதிபால் சிங் கில்லுக்கு 100-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் பிரிதிபால் சிங் கில் தனது 100-வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்.

கடந்த 1920-ம் ஆண்டில் பாட்டியாலாவில் பிறந்தவர் பிரிதிபால். பின்னர் விமானப் படையில் சேர விரும்பி லாகூரில் உள்ள வால்டன் படை தளத்தில் இணைந்தார். பின்னர் பிரிட்டிஷ் அரசு நடத்தி வந்த ராயல் இந்திய விமானப் படையில் இணைந்தார். ஆனால், இவரது தந்தை மேஜர் ஹர்பால் சிங் கில் கூறியதன் பேரில் விமானப் படையில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து இந்தியக் கடற்படையில் சேர்ந்த பிரிதிபால் ஐஎன்எஸ் தீர் கப்பலில் பணிபுரிந்தார். அப்போதுதான் 2-ம் உலகப் போரில் அவர் பங்கேற்றார். பின்னர் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கடற்படையில் இருந்து விலகி ராணுவத்தில் சேர்ந்தார்.

இரண்டாம் உலகப் போர், இந்தியா – பாகிஸ்தான் போர் (1965), இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படை என அனைத்திலும் பங்கேற்ற ஒரே வீரர் பிரிதிபால் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் அண்மையில் தனது 100-வது பிறந்த நாளை சண்டிகரிலுள்ள தனது இல்லத்தில் குடும்பத்தார், உறவினர்களுடன் கொண்டாடினார். வரும் 24-ம்தேதி இவர் தனது 70-வது திருமண நாளை 93 வயதாகும் மனைவி பிரிமைண்டர் கவுருடன் கொண்டாடாவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x