Last Updated : 12 Dec, 2020 03:21 PM

 

Published : 12 Dec 2020 03:21 PM
Last Updated : 12 Dec 2020 03:21 PM

கடற்படை விமான விபத்தில் உயிரிழந்த பைலட் கமாண்டர் நிஷாந்த் சிங்: முழு ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி 

விமான விபத்தில் பலியான கடற்படை பைலட் கமாண்டர் நிஷாந்த் சிங்

பனாஜி

கோவா கடற்கரையில் மிக் -29 கே விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த போர் விமானியும் பைலட் கமாண்டருமான நிஷாந்த் சிங்கிற்கு இந்திய கடற்படை முழு ராணுவ மரியாதைகளுடன் இறுதி அஞ்சலி செலுத்தியது.

நவம்பர் 26 கோவா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் தாங்கி ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற கடற்படை விமானம் ரஷ்ய ஜெட் மிக் -29 கே, மாலை 5 மணியளவில் அரபிக் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவம் நடந்த உடனேயே விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், கமாண்டர் நிஷாந்த் சிங்கின் உடல் இந்த வார தொடக்கத்தில் மீட்கப்பட்டது.

விபத்தில் இறந்த போர் விமானி கமாண்டர் நிஷாந்த் சிங்கிற்கு இந்திய கடற்படையினரால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

கோவாவில் நவம்பர் 26 ம் தேதி நடந்த மிக் -29 கே விபத்தில் கடற்படை பைலட் கமாண்டர் நிஷாந்த் உயிர் பிழைக்கவில்லை.

விபத்தில் உயிரிழந்த போர் விமானி கமாண்டர் நிஷாந்த் சிங்கிற்கு இந்திய கடற்படை முழு இராணுவ மரியாதைகளுடன் இன்று (சனிக்கிழமை) இறுதி அஞ்சலி செலுத்தியது.

இறுதி அஞ்சலி நிகழ்வில் நிஷாந்தின் மனைவி நயாப் ரந்தாவா பங்கேற்றார். மூவர்ணக்கொடியையும் அவரது கணவரின் சீருடையும் படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரியிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார்.

ஒரு கடற்படை அதிகாரியின் மகனான கமாண்டர் நிஷாந்த் சிங், கிரண், ஹாக் மற்றும் எம்.ஐ.ஜி -29 கே போர் விமானங்களில் திறமையான பறக்கும் பயிற்றுவிப்பாளராக இருந்தார்.

கமாண்டர் நிஷாந்த், அமெரிக்க கடற்படையுடன் மேம்பட்ட திடீர் தாக்குதல் பயிற்சியையும் பெற்றவர். நிஷாந்த் ஒரு தகுதிவாய்ந்த மலையேற்ற வீரர் மற்றும் ஒரு திறமையான படகு வீரரும் ஆவார். இந்திய கடற்படை தனது மிகச் சிறந்த விமானிகளில் ஒருவரை இழந்துவிட்டது.

இவ்வாறு கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x