

உளவுத் துறை முன்னாள் தலைவர் அஜீத் குமார் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போது 69 வயதாகும் தோவல் கேரள மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் பணிக்கு தேர்வானவர். 2005-ம் ஆண்டில் உளவுத் துறை தலைவர் பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
1999-ல் தீவிரவாதிகளால் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டபோது, தோவல் இந்தியா சார்பில் தூதராகப் பணியாற்றினார்.
33 ஆண்டுகளுக்கு மேல் உளவுத் துறையில் பணியாற்றியுள்ள அவர் வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், காஷ்மீரில் கலவர காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர். கீர்த்தி சக்ரா விருது பெற்ற முதல் போலீஸ் அதிகாரியும் இவர்தான்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், தாக்குதல் வியூகங்களை வகுப்பதிலும் தேர்ச்சி பெற்றவர் என்பதாலேயே தோவலை இப்பதவிக்கு மோடி தேர்வு செய்துள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்பு அவரது உத்தரவின் பேரில் நடைபெற்றுள்ள இரண்டாவது முக்கியமான நியமனம் இது. முதலாவதாக தனது முதன்மை செயலாளராக நிர்பேந்திர மிஸ்ராவை மோடி நியமித்தார்.