

இந்திய - கனடா இயக்குநர் தீபா மேத்தா. இவர் பயர், எர்த், வாட்டர் போன்ற திரைப்படங்களை எடுத்து கடும் சர்ச்சைக்கு உள்ளானார். இந்நிலையில், ‘ஃபன்னி பாய்’ (வேடிக்கையான பையன்) என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். இத்திரைப்படத்தில் இலங்கையில் இனப் போர் நடைபெற்ற கால கட்டத்தையும் அப்போது தன்பாலின சேர்க்கையாளர்களின் நிலை குறித்தும் விவரித்துள்ளார். இந்தப்படம், ஷியாம் செல்வதுரை என்றஇந்திய - கனடா எழுத்தாளரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்துக்கு ‘தன்பாலின சேர்க்கையாளர் தமிழர்குழு’ (கியூடிசி) கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது. இத்திரைப்படத்துக்கு உலகளவில் எதிர்ப்புகளை பெரிதாக்க வேண்டி, இந்தக் குழு இணையதளத்தில் ஹேஷ்டேக் வெளியிட்டு, மனு அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இப்படம் குறித்து கியூடிசி கூறியிருப்பதாவது:
இயக்குநர் தீபா மேத்தா பொறுப்பற்ற வகையில் திரைப்படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது இலங்கையில் இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களுடன் கைகோத்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். அத்துடன் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும்முயற்சியாகவும் இத்திரைப்படத்தை எடுத்துள்ளார். இத்திரைப்படத்தில் இலங்கை இனப் போரின் போது தமிழ் மக்களின் நிலை குறித்து விவரிப்பதாய் கூறப்படுகிறது. அத்துடன், தமிழ்,சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது. ஆனால், படத்தில் ஒரு தமிழ் நடிகர், நடிகை கூட முக்கிய கதாபாத்திரத்தில் இல்லை.
திரைப்படத்தில் தமிழ் மொழியை தரக்குறைவான வகையில் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால், தமிழ்மொழிப் படம் என்ற வரிசையில், ஆஸ்கர் விருதுக்காக படத்தை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தமிழர்களின் அடையாளம், உயிர்மூச்சுடன் கலந்ததுதான் தமிழ்மொழி.
இனப்படுகொலையில் சம்பந்தப்பட்ட அப்போதைய அதிபர் ராஜபக்ச மற்றும் சிங்களவர்களின் ஆதரவைப் பெற்று இந்தத் திரைப்படத்தை தீபா மேத்தா எடுத்துள்ளார்.
ஷியாம் செல்வதுரையின் நாவலில் தன்பாலின சேர்க்கையாளர்கள் பற்றியும் தமிழர்கள் பற்றியும் தனித்துவமான வகையில் கூறியிருப்பார். அதை கியூடிசி குழுவினரும் பாராட்டி வரவேற்றோம். ஆனால், அதே நாவலை தீபா மேத்தா தனது திரைப்படத்தில் சித்தரித்துள்ள விதம், தமிழர்களையும் தன்பாலின சேர்க்கையாளர்களையும் இழிவுப்படுத்துவதாக உள்ளது.
இலங்கையில் தன்பாலின சேர்க்கை இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை, இன தமிழ் எதிர்ப்பு வன்முறை, இலங்கையில் ஓரினச் சேர்க்கையுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, டெலிபிலிம், சிபிசி, அன்டாரியோகிரியேட்ஸ் போன்ற கனடா கலாச்சார அமைப்புகள் ஆராய்ந்து திரைப்படத்துக்கு ஆதரவு அளிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அதேபோல், வேடிக்கையான பையன் படத்தில் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கான அடையாளங்களை இழிவுப்படுத்தும் சித்தரிப்புகளை இயக்குநர் தீபா மேத்தா நிறுத்திக் கொள்ள வேண்டும். தரக்குறைவான ஒரு தமிழ்ப் படத்தை எடுத்துள்ளதற்காக, தன்பாலின சேர்க்கையாளர்கள் மற்றும் தமிழர்களிடம் தீபா மேத்தாவும், அவரது திரைப்பட குழுவினரும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு கியூடிசி குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.