Last Updated : 10 Dec, 2020 08:44 PM

 

Published : 10 Dec 2020 08:44 PM
Last Updated : 10 Dec 2020 08:44 PM

வரலாறு பதிவு செய்யும்; விவசாயிகள் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்: காங்கிரஸ் விமர்சனம்

கோப்புப்படம்

புதுடெல்லி

விவசாயிகள் உரிமைக்காகச் சாலையில் இறங்கிப் போராடுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடியோ புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஜனநாயகத்தை நசுக்கியபின் புதிய நாடாளுமன்றம் எதைக் குறிக்கப்போகிறது என்று காங்கிரஸ் கட்சி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் ரூ.971 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. 21 மாதங்களில், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:

''விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகச் சாலையில் போராடும்போது, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றம் கட்டும் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்றார் என்ற நிகழ்வை வரலாறு பதிவு செய்யும்.

பிரதமர் அவர்களே, நாடாளுமன்றம் கற்களாலும், தூண்களாலும் கட்டப்படுவதில்லை. ஜனநாயகத்தை உருவகப்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் கிரகித்துள்ளது.

அரசியல் பொருளாதார, சமூக சமத்துவத்தை உணர்த்துகிறது. இரக்கம், குழுவாக இணைந்து பணியாற்றுபவர்களுக்கான நட்புறவு, அனுபவத்தைப் பகிர்தலை நாடாளுமன்றம் குறிக்கிறது. 130 கோடி மக்களின் ஆசைகளை நாடாளுமன்றம் உணர்த்துகிறது. இந்த உயர்ந்த மதிப்புகளை எல்லாம் மிதித்து நசுக்கிவிட்டுக் கட்டும் கட்டிடம் எதை உணர்த்தப் போகிறது?

நமக்கு உணவு வழங்கும் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகக் கடந்த 16 நாட்களாகச் சாலையில் போராடி வருகிறார்கள். ஆனால், சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் உங்களுக்கு அரண்மனை கட்டுகிறீர்கள். ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது ஒருவரின் விருப்பத்தையும், ஆசைகளையும் நிறைவேற்றுவது அல்ல. பொதுநலத்துடன் மக்களுக்குச் சேவையாற்றுவதாகும்''.

இவ்வாறு சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பர் ட்விட்டரில் கூறுகையில், “சுதந்திரமான ஜனநாயகத்தின் இடிபாடுகளுக்கு இடையே புதிய நாடாளுமன்றத்தின் அடித்தளம் அமைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தற்போது இருக்கும் நாடாளுமன்றம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அதாவது, மத்தியப் பிரதேசத்தில் மொரேனாவில் உள்ள சவுசாத் யோகினி கோயில் போன்று நினைவில் நிற்கக்கூடியது. ஆனால், தற்சார்பு இந்தியா நாடாளுமன்றம், வாஷிங்டனில் இருக்கும் பென்டகனைப் போல் இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x