

குஜராத்தில் எந்தவித அனுமதியுமின்றி கோவிட் நோய்த் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நரோடா பகுதியில் உள்ள ஆத்மியா மருத்துவமனையில் எந்தவொரு அனுமதியுமின்றி கோவிட் -19 சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து அகமதாபாத் மாநகராட்சிக் குழு புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. இங்கு 13 நோய்த் தொற்றாளர்கள் கோவிட் -19 சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆய்வுக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''ஆத்மியா மருத்துவமனையில் கோவிட் சிகிச்சைக்கான எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. அது மட்டுமின்றி நோய்த்தொற்றைக் கண்டறிய ஆர்டி-பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொள்ளாமல் கோவிட் நடைமுறை அல்லாத வேறு முறைகளைக் கையாண்டதும் தெரியவந்தது.
கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (எச்.ஆர்.சி.டி) ஸ்கேன்களின் அடிப்படையில் நோயாளிகளைக் கண்டறிவது மற்றும் ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் கோவிட் -19 சிகிச்சைக்காக அவர்களை அனுமதித்தது போன்ற முறைகளை இம்மருத்துவமனை பின்பற்றியுள்ளது.
சிகிச்சை ஆவணங்களைப் பரிசோதித்துப் பார்த்தபோது, கோவிட்-19 சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. இங்கு 13 நோய்த் தொற்றாளர்கள் கோவிட் -19 சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நோய்த் தொற்றாளர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. விரைவில் இம்மருத்துவமனை நிர்வாகம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்''.
இவ்வாறு ஆய்வுக்குழுவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.