Last Updated : 10 Dec, 2020 03:15 AM

 

Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM

விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்தும் அகாலி தளம்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட திட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறிய சிரோன்மணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சி, அடுத்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப் மாநில கட்சியான எஸ்ஏடி நீண்ட காலமாக பாஜகவின் தோழமைக் கட்சியாக இருந்தது. பாஜக ஆதரவுடன் பஞ்சாபில் கடந்த முறை ஆட்சி நடத்தியது. பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசில் எஸ்ஏடி கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்சிம்ரத் கவுர், கடந்த செப்டம்பரில் பதவி விலகினார். இதையடுத்து என்டிஏ-வில் இருந்தும் எஸ்ஏடி வெளியேறியது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்தி தங்கள் கட்சியை பலப்படுத்த எஸ்ஏடி முயற்சித்து வருகிறது. டெல்லியின் சிங்கு எல்லையில் முகாம் அமைத்து போராடும் விவசாயிகளுக்கு உணவு,தங்கும் கூடாரங்கள் மற்றும் குளிருக்கான கம்பளி வசதிகளை இக்கட்சி செய்து தருகிறது. பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி போராட்டத்துக்கு வரும் விவசாயிகளின் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோலும், டீசலும் இக்கட்சி இலவசமாக அளிக்கிறது. காங்கிரஸ்,ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் செய்யும் உதவிகளைவிட எஸ்ஏடி அதிக உதவிகளை செய்கிறது.

இதன் மூலம் பஞ்சாப் விவசாயிகளிடம் செல்வாக்கு பெற அக்கட்சி முயற்சிக்கிறது. இதன் மூலம் 2022 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடவும் பாதை அமைக்கிறது.

எஸ்ஏடி கட்சியை தேசிய அளவிலும் பலப்படுத்த அதன்தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக விவசாயிகள் போராட்டத்தின் பெயரில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து எஸ்ஏடி ஆதரவு கோருகிறது.

மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,சிவசேனா தலைவரும் மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேஆகியோரை எஸ்ஏடி மூத்த தலைவர் பிரேம்சிங் சாந்துமஜ்ரா சந்தித்தார். பிறகு இவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.

இவர்களிடம் பேசி விவசாயிகளுக்காக ஓர் அனைத்துக் கட்சி கூட்டத்தை டெல்லியில் நடத்தஇக்கட்சி திட்டமிடுகிறது. தென்மாநில கட்சிகளின் தலைவர்களையும் எஸ்ஏடி தலைவர்கள் சந்திக்க உள்ளனர். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை எஸ்ஏடி தலைவர்கள் அடுத்த வாரம் சந்திக்க உள்ளனர். இதன் பிறகு தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவர்கள் சந்திக்க உள்ளனர்.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை கடந்த காலங்களில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு செய்து வந்தார். இதன் மூலம் அவர் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். இவரைப் போல இந்த முறை முக்கியத்துவம் பெற எஸ்ஏடி தலைவர்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் மற்ற மாநிலங்களில் கால் பதிக்க முடியும், பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற முடியும் என அக்கட்சித் தலைவர்கள் நம்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x