ஆந்திராவில் மர்ம நோய் பரவல் காரணமாக தண்ணீர் குடிக்கவே அஞ்சும் பொதுமக்கள்

ஆந்திராவில் மர்ம நோய் பரவல் காரணமாக தண்ணீர் குடிக்கவே அஞ்சும் பொதுமக்கள்
Updated on
1 min read

ஏலூரு: ஆந்திர மாநிலம் ஏலூரு மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், கடந்த சனிக்கிழமை இரவு முதல் வலிப்பு, வாந்தி, மயக்கம் என ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, டெல்லி, புனே நகரங்களில் இருந்தும், உலக சுகாதார மையத்தில் இருந்தும் மருத்துவக் குழுவினர் ஏலூரில் முகாமிட்டுள்ளனர்.

இதுவரை 580-க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஏலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 153 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தண்ணீர், பால் ஆகியவற்றையும் பரிசோதித்து வருகின்றனர்.

இதனிடையே, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மருத்துவ குழுவினருடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், உயர் சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். விரைவில் இதற்கான காரணத்தை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் முதல்வர் ஜெகன் கூறினார்.

நேற்று முன்தினம் இரவு புதிய நோயாளிகள் யாரும் வராத காரணத்தால், மர்ம நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால், நேற்று மீண்டும் 10 முதல் 15 பேர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஏலூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்குள்ள பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் அங்குள்ள மக்கள் தண்ணீர் குடிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைகளில் இருந்து தண்ணீர் பாட்டில்களை வாங்கி குடித்து வருகின்றனர். பால் குடிக்கவும் அச்சப்படுவதால் அதன் விற்பனை குறைந்துவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in