

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி விரும்பினால் அவரது மதச்சார்பற்ற ஜனதாதளம் (மஜத) கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது என கர்நாடக அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘‘நான் காங்கிரஸுக்கு பதிலாக பாஜக வுடன் கூட்டணி அமைத்திருந்தால் 5 ஆண்டு காலத்துக்கும் முதல்வராக நீடித்திருப்பேன். காங்கிரஸார் எனக்கும் மஜதவுக்கும் துரோகம் செய்துவிட்டனர். என் தந்தை தேவ கவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிட்டார்'' என குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:
கர்நாடகாவில் பாஜகவுக்கும் மஜதவுக்கும் இடையே இயற்கை யான கூட்டணி உள்ளது. கடந்த காலத்தில் நாங்கள் இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறோம். கடந்த பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் கூட பாஜக மேயர் பதவியை கைப்பற்ற மஜத உதவியது.
எனவே, முன்னாள் முதல்வர் குமாரசாமி விரும்பினால் அவரது மஜத கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக இருக்கிறது. விரைவில் நடைபெற இருக்கும் பெலகாவி தொகுதியின் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எங்களோடு மஜத கூட்டணி வைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.