

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் தரப்பில் கூடுதலாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நியமிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் விடு தலையை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனுவும் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 8 வார காலக் கெடுவுக்கு பிறகு வரும் 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையொட்டி மூத்த அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது இறுதிவாதத்தை தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளார். அவருக்கு உதவியாக கர்நாடக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், உதவி அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் ஆவணங்களை திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், “இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வாதிட கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும். இந்தப் பணிக்கு டெல்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வை பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா கடந்த மாதம் கடிதம் எழுதினார். இந்தக் கோரிக்கை குறித்து ஆலோசனை வழங்குமாறு மாநில தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமாருக்கு சட்டத் துறை கடிதம் அனுப்பியது.
அவரது பரிந்துரையின்படி துஷ்யந்த் தவே-வை கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.