

நடிகை விஜயசாந்தி நாளை பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழி திரைப் படங்களில் துணிச்சல் மிக்ககதாபாத்திரங்களில் நடித்துபுகழ்பெற்றவர் விஜயசாந்தி. திடீரென இவர் ‘தல்லி தெலங்கானா’ எனும் அரசியில் கட்சியை தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர், அக்கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தார். அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் இவரை, வீரமிக்க தெலங்கானா சகோதரி என அறிவித்தார். ஆனால் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்ததால், டிஆர் எஸ் கட்சியிலிருந்து விஜயசாந்தி விலகினார்.
கடந்த தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால், தெலங்கானாவில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியில் பிரச்சாரக் குழுவின் தலைவராக விஜயசாந்தி உள்ளார்.
அண்மையில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை டெல்லியில் விஜயசாந்தி சந்தித்தார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில், விஜயசாந்தி மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் நாளை பாஜகவில் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக நடிகை விஜயசாந்தி நாளை டெல்லி செல்ல உள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நாளை அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.