Last Updated : 06 Dec, 2020 03:52 PM

 

Published : 06 Dec 2020 03:52 PM
Last Updated : 06 Dec 2020 03:52 PM

அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்கும் ஒரே கட்சி பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதி பெருமிதம்

அம்பேத்கரின் மனிதநேயக் கொள்கைகளை முன்னெடுக்கும் ஒரே கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே செயல்பட்டு வருவதாக மாயாவதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகரும் சட்டமேதையுமான பி.ஆர்.அம்பேத்கர் 1956ல் காலமானார். அம்பேத்கரின் 64வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த சட்ட மேதை நினைவுதினத்தில் இன்று நாட்டில் பல்வேறு தலைவர்களும் தனது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி அம்பேகர் நினைவைப் போற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சமத்துவ சமூக அமைப்பை நிறுவுவதற்கு அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார், அதற்கான அனைத்து வகையான போராட்டங்களையும் அவர் எதிர்கொண்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள் உருவாக்குவதில் அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

உத்தரபிரதேசத்தில் எனது கட்சி ஆட்சியில் இருந்தபோது அம்பேத்கர் பெயரில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினேன். அவரது சாதனைகளுக்கு ஒரு சிறிய காணிக்கைதான் இந்த திட்டங்கள். ஆனால் அம்பேத்கர் பெயரிலான நான் கொண்டுவந்த திட்டங்களைப் பற்றி கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் மோசமாக நடந்துகொண்டன.

அம்பேத்கரின் மனிதநேயக் கொள்கைகளை முன்னெடுக்கும் ஒரே கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x