Last Updated : 04 Dec, 2020 04:14 PM

 

Published : 04 Dec 2020 04:14 PM
Last Updated : 04 Dec 2020 04:14 PM

டெல்லி போராட்டத்தில் ஷாஹின்பாக் போராட்டக்காரர்களை அனுமதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

புதுடெல்லி

டெல்லி போராட்டத்தில் ஷாஹின்பாக் போராட்டக்காரர்களை அனுமதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது மேடையை ஆதரவாகப் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று விவசாய சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 9 நாட்களாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது.

இதில் ஒருதரப்பினராக மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக ஷாஹின்பாக்கில் போராட்டம் நடத்திய பெண்கள் உள்ளனர்.

இவர்களில் முக்கியமானவரான ஷாஹின்பாக் தாதி எனும் மூதாட்டியான பில்கிஸ்பானு மூன்று தினங்களுக்கு முன் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வந்தார். இவரை, டெல்லியின் எல்லைக்கு முன்பாக டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். எனவே, இதன் மறுநாள் ஷாஹின்பாக் போராட்டத்தின் வேறு சில முக்கிய பெண்கள் டெல்லி-ஹரியாணா எல்லையின் சிங்குப் பகுதியை அடைந்தனர்.

இதில், கனீஸ் பாத்திமா, தட்மினா, ரேஷ்மி உள்ளிட்ட சுமார் 100 பேர் இருந்தனர். இவர்கள் சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களில் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அவர்களைத் திரும்பச் செல்லும்படி கூறிவிட்டனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஹரியாணா விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான ஹர்கித்சிங் கூறும்போது, ‘‘எங்களுக்கு ஆதரவாகப் போராட்டக் குரல் கொடுக்க வருபவர்களை நாம் வரவேற்கிறோம். ஆனால், தங்கள் கோரிக்கைகளை எங்கள் மேடைகளில் வலியுறுத்த எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். இந்தத் தடை அரசியல் கட்சிகளுக்கும் விதிக்கப்பட்டது. அதன் தலைவர்களை எங்கள் போராட்டக் களத்தில் பேச அனுமதிக்கவில்லை’’ எனத் தெரிவித்தார்.

அதேபோல், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய இரண்டு கட்டப் பேச்சுவார்த்தையிலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தேநீர் மற்றும் உணவு எதையும் ஏற்க மறுத்து விட்டனர். இவற்றை அளிக்க முன்வந்த அரசியல் கட்சிகளுக்கும் விவசாயிகள் மறுத்து அவற்றைத் தாமே ஏற்பாடு செய்து கொண்டனர்.

இதற்கு விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஐம்பதிற்கும் மேற்பட்ட அமைப்பினரில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உண்டு. இதில், அரசியல் எதிர்ப்பிற்கு அனுமதித்தால் அவர்களது உணர்வு புண்படும் எனக் கருதப்படுகிறது. இதனால், விவசாயிகள் போராட்டத்தில் ஒற்றுமை குலைந்து விடாமல் இருக்க என அஞ்சி மற்றவர்களை அனுமதிக்க மறுக்கப்பட்டு வருகிறது.

மம்தா ஆதரவு

இதனிடையே, சில முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிங்கு எல்லையில் முக்கிய விவசாயிகளைச் சந்திக்க முயன்றனர். இதற்கும் அனுமதிக்காத விவசாயிகள் அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டனர். இதுபோன்ற காரணங்களால், திரிணமூல் காங்கிரஸ் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று, விவசாயத் தலைவர்களிடம் போனில் பேசினார். அதில் முக்கிய மூன்று மசோதாவை வாபஸ் பெறவைக்கும் போராட்டத்திற்கு தமது ஆதரவு தொடரும் என உறுதி அளித்துள்ளார்.

தேஜஸ்வியின் தர்ணா

இந்நிலையில், பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரான தேஜஸ்வி பிரசாத் யாதவ் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளார். பாட்னாவின் காந்தி மைதானத்தில் இன்று சனிக்கிழமை தம் கட்சியினருடன் தர்ணாவில் அமரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x