Published : 04 Dec 2020 01:37 PM
Last Updated : 04 Dec 2020 01:37 PM

தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை; ராமநாதபுரம் - தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் கரையை கடக்கும்

மன்னார் வளைகுடாப் பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த 3 மணி நேரமாக நிலை கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தென் தமிழகம், கேரளா, மாஹே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் கனமானது முதல் மிக கனமானது வரை மழை பெய்யலாம்

மன்னார் வளைகுடாவையும், வங்காள விரிகுடாவைவையும் ஒட்டிய பகுதிகளிலும், தென் தமிழக கடலோரத்திலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது

மன்னார் வளைகுடா பகுதியில், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த 3 மணி நேரமாக நிலை கொண்டுள்ளது. ராமநாதபுரத்தின் தென்மேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில், பாம்பனுக்கு மேற்கு - தென்மேற்கே 70 கி.மீ., கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 160 கிமீ. தொலைவில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை உள்ளது. இதனால் மணிக்கு 55 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இது மெதுவாக மேற்கு - தென் மேற்காக நகர்ந்து ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டத்தை ஒட்டிய பகுதியில் அடுத்த 6 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு அது அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வுநிலையாக வலுவிழக்கும்.

தென் தமிழகத்திலும், கேரளா மற்றும் மாஹே பகுதிகளின் சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமானது முதல் மிக கனமானது வரையில் மழை பெய்யக் கூடும். வட தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமனது முதல் மிக கனமானது வரையில் மழை பெய்யலாம்.

ஆந்திராவில் தென் கடலோரம், லட்சத்தீவு பகுதிகளில் டிசம்பர் 4 ஆம் தேதி கன மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோரப் பகுதியில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மணிக்கு 55 முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்தில் திடீர் காற்று வீசும். டிசம்பர் 4 மாலைக்குள் இது மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகம் என குறையும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கேரளா கடலோரப் பகுதியில் மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ வரையிலான வேகத்திற்குக் காற்று வீசலாம்.

மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியிலும், தென் தமிழகத்தின் கடலோரப் பகுதியிலும், மேற்கு இலங்கையிலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு கடல் மிகுந்த சீற்றத்துடன் இருக்கும்.

மன்னார் வளைகுடா பகுதியிலும், வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியிலும், தென் தமிழக கடலோரத்திலும், வட இலங்கை கடற்பகுதியிலும், மீனவர்கள் அடுத்த 12 மணி நேரத்திற்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது. கேரளா கடலோரம், லட்சத்தீவு, மாலத்தீவுகள் பகுதி, அரபிக் கடலில் தென்கிழக்குப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x