Last Updated : 04 Dec, 2020 03:15 AM

 

Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மேம்படுத்துகிறது மத்திய அரசு: செம்மொழிகளை துறைகளாக இணைக்க திட்டம்

இந்திய மொழிகள் ஆய்வுக்காக மைசூருவில் 1969-ல் இந்தியமொழிகள் மத்திய நிறுவனம் (சிஐஐஎல்)அமைக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்தி மற்றும்ஆங்கில மொழி வளர்ச்சிக்கானகல்வி நிறுவனங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தப்பட்டன. அதுபோல் சிஐஐஎல்-ஐ மத்திய பல்கலைக்கழகமாக மாற்ற தற்போது முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. மத்திய பல்கலைக்கழக மாக மாற்றிய பிறகு இதற்கு பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா (பிபிவி) எனப் பெயரிடப்பட உள்ளது. செம்மொழி அந்தஸ்துபெற்ற மொழிகளை இதன் துறைகளாக இணைக்க திட்டமிடப்பட் டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகளும் செம்மொழி அந்தஸ்து பெற்றாலும் தமிழைப் போல அவற்றுக்கு தனி ஆய்வு நிறு வனம் அமைக்கப்படாதது இதற்கு சாதகமாக உள்ளது.

தமிழுக்கு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்சென்னையில் அமைக்கப்பட் டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இதற்கு நிரந்தர இயக்குநர், சில மாதங்களுக்கு முன்புதான் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் மற்ற மொழிகளுடன் தமிழும் இணைக்கப்பட்டால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் பிபிவி உடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

செம்மொழிகளை புதிய மத்தியபல்கலைக்கழகமான பிபிவி உடன்இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கூறுகளை ஆய்வு செய்ய 11 அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை மத்திய கல்வி அமைச்சகத்தின் மொழிகள் பிரிவு அமைத்துள்ளது.

இக்குழுவுக்கு தமிழரான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தலைமை ஏற்றுள்ளார். அடுத்த 3 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு இவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் என்.கோபாலசாமி கூறும்போது, “தற்போது இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதில் வல்லுநர்கள் தட்டுப்பாடு உள்ளது. இது கவனிக்கப்படாமலேயே உள்ளது. இதை முக்கிய குறிக்கோளாக்கி அனைத்து மொழிகளையும் வளர்க்கும் வகையில் சிஐஐஎல் நிறுவனத்தை மத்தியப் பல்கலைகழகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

சிஐஐஎல் முன்னாள் இயக்குநர்க.ராமசாமி, ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘சிஐஐஎல்-ஐ மத்தியப் பல்கலைக்கழகமாக மேம்படுத்துவது வரவேற்கத்தக்கது. அதேசமயம், செம்மொழி மத்திய நிறுவனங்களையும் அதன் துறைகளாக கொண்டு வரும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளின் சுதந்திரமான வளர்ச்சிக்கு இது தடையாக அமைந்துவிடும். இதன் மீதான நிலைப்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம்தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

இதற்குமுன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தைதிருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையுடன் இணைக்கும் முயற்சி நடைபெற் றது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பவே அம்முயற்சி கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x