

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதை உறுதிப்படுத்தி உள்ள நிலையில், பல்வேறு விமர்சனங்களும், வாழ்த்துகளும் வந்த வண்ணம் உள்ளன.
ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கூறும்போது, ‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். எனக்கு அவர் நல்ல நண்பர். அவர் சினிமா துறையில் வெற்றி பெற்றதைப் போன்று அரசியல் துறையிலும் வெற்றி அடைய வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்’’ என்று கூறினார்.
நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கூறும்போது, ‘‘நடிகர் ரஜினிகாந்த் எப்போதில் இருந்தோ அரசியலில்தான் இருக்கிறார். அவர் நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் மறைமுகமாக அரசியலில் இருக்கிறார் என நினைக்கிறேன். அவர் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்த நேரத்தில், அக்கட்சி தமிழகத்தை ஆண்டது. ரஜினி அரசியலுக்கு வருவதை நான் மிகுந்த வரவேற்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.