

புரெவி புயல் மன்னார் வளைகுடாவை நோக்கி மேலும் நகர்ந்து வரும் நிலையில் தென் தமிழ்நாடு, தென் கேரள கடற்கரையோரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையின் மீது மையம் கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு -வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணிக்கு மன்னார் வளைகுடாவுக்கு 40 கி.மீ கிழக்கிலும், பாம்பனுக்கு 120 கி.மீ கிழக்கு-தென்கிழக்கிலும், கன்னியாகுமரிக்கு 320 கி.மீ கிழக்கு-வடகிழக்கிலும் மையம் கொண்டிருந்தது.
இது மன்னார் வளைகுடாவை நோக்கி மேலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் இருந்து 90 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புயலானது பாம்பன் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே உள்ள தென் தமிழக கடற்கரையை இன்றிரவு மற்றும் நாளை அதிகாலைக்கிடையே கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 70-80 கி.மீ வேகத்தில் இருந்து, 90 கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்றும் கடும் மழை பொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களிலும், தெற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களிலும் இன்று பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் தமிழ்நாடு மற்றும் தெற்கு கேரளாவில் நாளையும் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 3 முதல் 5 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.