Last Updated : 03 Dec, 2020 12:50 PM

 

Published : 03 Dec 2020 12:50 PM
Last Updated : 03 Dec 2020 12:50 PM

உ.பி. அரசு புதிதாகக் கொண்டுவந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது 

உத்தரப் பிரதேச அரசு சமீபத்தில் கொண்டு வந்த லவ் ஜிகாத்துக்கு எதிரான கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதல் நபர் பரேலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்துக்காக நேர்மையற்ற முறையில் மதம் மாறுவதையும், இந்துப் பெண்களைக் காக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை உ.பி. அரசு கொண்டுவந்துள்ளது.

இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாகத் திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாகவும் கருதப்படும்

இந்தச் சட்டத்தின் கீழ் பரேலி மாவட்டம், தியோரானியா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஷெரீப்நகர் கிராமத்தைச் சேர்ந்த திக்காராம் ரதோர் என்பவர் ஒவைசி அகமது என்பவர் மீது காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், “ஒவைசி அகமது என்பவர் என் மகள் படிக்கும்போது அவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவரைக் கட்டாயப்படுத்தி, ஏமாற்றி, மதம்மாற்ற முயல்கிறார். நானும் எனது குடும்பத்தாரும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், கடந்த 3 ஆண்டுகளாக எங்களுக்கு நெருக்கடி கொடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார்.

எனது மகளை வேறு ஒருவருக்குக் கடந்த ஜுன் மாதம் திருமணம்செய்து கொடுத்துவிட்டேன். இருப்பினும் தொடர்ந்து எனது மகளுக்கும், எனக்கும் மிரட்டல் விடுத்து மகளை மதம்மாறி திருமணம் செய்துகொள்ள அகமது வற்புறுத்துகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரையடுத்து, தியோரானியா போலீஸார் உ.பி. சட்டவிரோத மதமாற்ற அவசரச் சட்டத்தின் கீழ் அகமது மீது பிரிவு 3 மற்றும் 5-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அவரைக் கைது செய்ய முடியாமல் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் தியோரானியா போலீஸார் உவெய்ஸ் அகமதுவை நேற்று கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச அரசு கட்டாய மதமாற்றத் தடைக்கான அவசரச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு மற்றும் முதல் கைதாக இது இருக்கிறது.

இதுகுறித்து பேரெய்லி காவல் டிஜஜி ராஜேஷ் குமார் பாண்டே கூறுகையில், "உ.பி. அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றச் சட்டத்தில் முதல் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பரேலியில் உள்ள ரிச்சா ரயில்வே பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டார். உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x