

நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில், “நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்” என்று அறிவித்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ, நாட்டில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடத் தேவையில்லை, அவசியமில்லை என்று தெரிவித்தது.
மத்திய அரசுக்குள்ளேயே பிரதமர் மோடி ஒரு விதமாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் ஒருவிதமாகவும் விடுத்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நாட்டில் ஒவ்வொரு இந்தியருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பிரதமர் மோடியின் பேச்சு வெற்றுப் பேச்சு என்பதைப் போல், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கரோனா தடுப்பூசி போடத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனது நிலைப்பாட்டிலிருந்து அடிக்கடி மாறும் யுடர்ன் அரசாக மத்தியில் ஆளும் அரசு இருக்கிறது.
இந்திய மக்கள் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு பெற முடியுமா. மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்குமா அல்லது கொடிய வைரஸிலிருந்து தப்பிக்க மக்கள் சுதேசி தயாரிப்பை நம்பி இருக்க வேண்டுமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், “ நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அரசு ஒருபோதும் கூறவில்லை.
அறிவியல் ரீதியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில்தான் கரோனா தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்தது” என்று கூறியுள்ளார்.