Published : 02 Dec 2020 07:27 PM
Last Updated : 02 Dec 2020 07:27 PM

புரெவி புயல்;  தமிழகத்திற்கு தேவையான உதவிகளை அளிக்க தயார்: தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி உறுதி

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

புரெவி புயல் சூழலில் தமிழகத்திற்கு தேவையான உதவிகளை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

தென் வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இதற்குப் புரெவி என்று பெயரிட்ப்பட்டுள்ளது.

புரெவி புயல் பாம்பன் பாலத்துக்குக் கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரிக்குக் கிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இன்று இரவில் இலங்கையைக் கடக்கக் கூடும் எனவும், நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

புயல் புரெவி சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். புரெவி புயலால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும், இதனால் தமிழகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும் விவாதித்தோம். தமிழகத்திற்கு தேவையான உதவிகளை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மக்கள் முன்கூட்டியே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x