Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

எல்லைகளை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை; வேளாண் துறை அமைச்சருடன் அமித் ஷா அவசர ஆலோசனை: விவசாயிகள் போராட்டத்தால் தலைநகர் ஸ்தம்பித்தது

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தலைநகரில் உள்ள 5 எல்லைகளை முற்றுகை யிட போவதாக எச்சரித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பெரு நிறுவனங் களுக்கு மட்டுமே சாதகமாக இருப் பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி னர். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்த சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்த போதிலும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட் டம் நடத்தினர். பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

டெல்லியில் முகாம்

இந்தச் சூழலில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தலைநகர் டெல்லிக் குள் கடந்த 27-ம் தேதி நுழைந்தனர். போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசி யும் அவர்களை கலைக்க முயன் றனர். ஆனால், அதிக எண்ணிக் கையில் விவசாயிகள் இருந்ததால் போலீஸாரின் முயற்சி பலனளிக்க வில்லை.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு

தாங்கள் போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானங்களை ஒதுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். எனினும், மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. இதனால், சுமார் 4000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் முகா மிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக நேற்றும் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. இதன் காரணமாக, டெல்லியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதனிடையே, விவசாயிகள் புராரி பகுதியில் போராட்டம் நடத்த முன்வந்தால், முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உள்துறை அமித் ஷா இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந் தார். ஆனால், அவரது யோச னையை விவசாய அமைப்புகள் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன. மேலும், தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தன.

எல்லைகளை முடக்க திட்டம்

இந்நிலையில், தங்களுக்கு ஜந்தர் மந்தர் மைதானத்தை ஒதுக்கவில்லை என்றால், மற்ற மாநிலங்களில் இருந்து டெல் லிக்கு செல்லும் 5 எல்லைகளை முடக்குவோம் என விவசாய அமைப்புகள் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளன. சோனிபட், ரோத் தக், ஜெய்ப்பூர், காஸியாபாத் - ஹாப்பூர், மதுரா ஆகிய எல்லை களை அவர்கள் முற்றுகையிட போவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இதையடுத்து, முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய அமைப்புகளின் இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். பாஜக தேசிய தலை வர் ஜே.பி. நட்டாவின் இல்லத் தில் நடைபெற்ற இந்த சந்திப் பின்போது, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

மேலும், டெல்லி எல்லைகள் முற்றுகையிடப்படுவதை தவிர்க் கும் நடவடிக்கைகள் தொடர் பாகவும் அவர்கள் ஆலோசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x