பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜக-ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கண்ணோட்டம்: ராகுல் காந்தி விமர்சனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
1 min read

பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜக- ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கண்ணோட்டமாக உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

2017-ம் ஆண்டு ஃபார்முலாவை அடிப்படையாகக் கொண்டு பட்டியலினம், பழங்குடியினத்தைச் சேர்ந்த 14 மாநிலங்களில் உள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 60 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட செய்தி
ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட செய்தி

மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வந்த நிலையில், அதில் மத்திய அரசு தனது பங்கை மட்டும் நிறுத்திவிட்டதாகச் செய்தி வெளியானது.

இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், “பழங்குடியினர், பட்டியலினத்தவர்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜக - ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கண்ணோட்டமாக உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்துவதே அவர்களின் வழிமுறைகளை நியாயப்படுத்தும் முடிவாகும்?” எனத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in