Last Updated : 28 Nov, 2020 08:04 AM

 

Published : 28 Nov 2020 08:04 AM
Last Updated : 28 Nov 2020 08:04 AM

கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி: அகமதாபாத், ஹைதராபாத், புனே மருந்து நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரடியாக இன்று ஆய்வு

பிரதமர் மோடி : கோப்புப்படம்

அகமதாபாத்


கரோனா தடுப்பு மருந்து தயாரிப்புப் பணிகள் நிலவரம் குறித்து அகமதாபாத், ஹைதராபாத், புனேயில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணயில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

இந்த மூன்று நிறுவனங்களும் 2,வது 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் இருப்பதால், மருந்து தயாரிப்பு பணிகளை நேரடியாக இன்று பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கரோனா தடுப்பு மருந்து வளர்ச்சி, அதன் தயாரிப்பு ஆகியவை குறித்து பிரதமர் மோடி நாளை(இன்று) 3 நகரங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த உள்ளார். அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பார்க், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்த உள்ளார்.

கரோனாவுக்கு எதிரானப் போரில் தற்போது முக்கியமான கட்டத்தில் இந்தியா இருக்கிறது. இந்த 3 நகரங்களில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கு நேரடியாகச் செல்லும் பிரதமர் மோடி , மருத்துவ விஞ்ஞானிகளிடம் மருந்து தயாரிப்புக்கான வசதிகள், தயாரிப்பு பணி குறித்து கேட்டறிவார்.

மேலும் மருந்து தயாரிப்பு பணியில் உள்ள சவால்கள், எப்போது பணிகள் முடியும், தயாரிப்பு பணியின் நிலவரம் ஆகியவற்றையும் கேட்டறிந்து விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

முதலில் அகமதாபாத் நகருக்குச் செல்லும் மோடி, ஜைடஸ் கேடில்லா நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்துகிறார். இந்த நிறுவனத்துக்கு இன்று காலை 9.30 மணிக்கு அங்கு பிரதமர் மோடி செல்கிறார்.

அதன்பின் அகமதாபாத்திலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் நகருக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஹக்கிம்பேட் விமானப்படைத் தளத்தில் இருந்து, ஜினோம் வேலியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு பிற்பகல் 1.30 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

அங்கு ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு, புனேவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். புனேயில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்துக்கு மாலை 4.30 மணிக்குச் செல்லும் பிரதமர் மோடி ஆய்வு நடத்தி, மருத்துவ விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதை முடித்துக்கொண்டு மீண்டும் டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்படுகிறார்”

இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இதில் சீரம் மருந்து நிறுவனம் ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா மருந்து நிறுவனங்களுடன் இணைந்து மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x