Last Updated : 28 Nov, 2020 03:16 AM

 

Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு எதிரொலி: நிரந்தர தலைவரை தேர்வு செய்ய கட்சி தலைமைக்கு நெருக்கடி

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாக இருந்த மூத்த தலைவர் அகமது படேலின் மறைவு, அக்கட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது. பிரச்சினைகளை சமாளிக்க ஆளில்லாமையால் நிரந்தர தலைவரை தேர்வு செய்ய தலைமைக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

கடந்த வருடம் நடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் பல்வேறு சிக்கல்களுக்கு காங்கிரஸ் கட்சி உள்ளாகி வருகிறது. இதில், காந்தி குடும்பத்தாருக்கும் தேசிய தலைவர்களுக்கும் இடையில் இருந்த பிரச்சினைகளை சமாளித்து வந்தார் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல். இவரது மறைவால் கட்சியில் பிரச்சினைகளை சமாளிக்க ஆளில்லாத நிலை உருவாகி உள்ளது.

சமீப காலமாக காங்கிரஸின் மூத்த தலைவர்களே வெளிப்படையாக கடிதம் எழுதி தமது கட்சித் தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தினர். இதுபோல் மேலும் சிலர் வெளிப்படையாக கட்சிக்கு எதிராக விமர்சிக்கத் தயாராவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அந்த மூத்த தலைவர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழக்க விரும்பாதது காரணமாகக் கருதப்படுகிறது. மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ராகுல் காந்தி தன் மூத்த தலைவர்களைவிட, இளம் தலைமுறையினரையே அதிகம் விரும்புவதும் காரணமாக உள்ளது.

இதனால், உடனடியாக காங்கிரஸுக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்யுமாறு அதன் தலைமைக்கு நெருக்கடி உருவாகி விட்டது. இதற்காக, நாட்டின் பல மாநிலங்களிலிருந்து சோனியா காந்திக்கு இளம் தலைவர்களிடம் இருந்து கடிதங்கள் வரத் தொடங்கிஉள்ளன. இதில், உடனடியாக காங்கிரஸுக்கு ஒரு நிரந்தரத் தலைவரை அமைக்க வேண்டும் எனவும், அது ராகுல் காந்தி அல்லது பிரியங்கா வதேராவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸ் தலைமை அலுவலக வட்டாரங்கள் கூறும்போது, "முறையான கடிவாளம் இன்றி இருப்பதால்தான் மூத்த தலைவர்களின் விமர்சனம் எல்லையை மீறி வருகிறது. இதற்கு உடனடியாக நிரந்தரத் தலைவரை நியமிப்பதுதான் தீர்வாக இருக்கும் என சோனியாவிடம் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் இதை அவரிடம் வலியுறுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்" என தெரிவித்தன.

தேசிய அளவில் காங்கிரஸின் துருப்புச் சீட்டாக பல வருடங்களாகக் கருதப்பட்டவர் பிரியங்கா.ஆனால், அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் களம் இறங்கியும் எதிர்பார்த்த பலனில்லை. எனவே, தலைவர் பதவியில் அமர தொடர்ந்து மறுக்கும் பிரியங்கா, முதலில் உ.பி. மாநிலத்தில் சாதிக்க விரும்புகிறார். இதற்காக அவர் 2022-ல் வரும் உபி சட்டப்பேரவை தேர்தல் வரை காத்திருக்க வேண்டி இருக்கும். எனவே, அதிக வாய்ப்புகள் கொண்ட ராகுலை விரைவில் காங்கிரஸின் நிரந்தரத் தலைவராக நியமிக்கும் சூழல் உருவாகி வருகிறது.

பாஜக வளர்ந்தது முதல் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகிய மூத்தவர்களால் காங்கிரஸுக்கு சிக்கல் உருவாகத்தொடங்கியது. இவர்களை சமாளித்து 2 முறை மத்திய ஆட்சிக்கும் தலைமை வகித்திருந்தது காங்கிரஸ். ஆனால், வயதில் மூத்த தலைவர்கள் இருந்தும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுவகை அரசியலை சமாளிக்க முடியாமல் காங்கிரஸுக்கு திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அரசியல்ஆலோசகராக அகமது படேல் வகித்த பதவியை பிடிக்கவும் போட்டி தொடங்கி விட்டது. இதில், ராகுல் தலைவரானால் அவருக்கு அரசியல் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸார் இடம் பிடிப்பதில் முன்னணி வகிப்பதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x