Last Updated : 27 Nov, 2020 03:00 PM

 

Published : 27 Nov 2020 03:00 PM
Last Updated : 27 Nov 2020 03:00 PM

உ.பி.யில் தீபாவளியில் பட்டாசுக்கு பதிலாக குண்டுகளை பொழிந்து மகிழ்ந்த பாஜக தலைவர்: துப்பாக்கி உரிமம் ரத்து, வழக்குப் பதிவு

நிதின் குப்தா

புதுடெல்லி

உத்திரப்பிரதேசத்தின் பாஜக தலைவர்களில் ஒருவர், தீபாவளியில் தன் துப்பாக்கி குண்டுகளை பொழிந்து மகிழ்ந்துள்ளார். வைரலான இந்த விடீயோவால் துப்பாக்கி உரிமம் ரத்தாகி, அவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

உ.பி.யின் பல அரசியல்வாதிகளுக்கு துப்பாக்கிகள் மீது மோகம் அதிகம். இவற்றில் அவ்வப்போது குண்டுகளை பொழிந்து அதன்மூலம் தம் செல்வாக்கை பொதுமக்களிடம் காட்ட முயல்வதும் அவர்களது வழக்கமாக உள்ளது.

இதனால், அவர்கள் செல்லும் பொதுமக்களின் விழா நிகழ்ச்சிகளில் தம் துப்பாக்கிகளில் குண்டுகளை வானில் சுட்டு மகிழ்வார்கள். அழைப்பு விடுத்தவர்களும் விழா மீதான நினைவு கூறலில், அரசியல்வாதி பொழிந்த குண்டுகளின் எண்ணிக்கை குறிப்பிட்டு மகிழ்வதும் உண்டு.

இந்தவகையில், உ.பி.யின் பாஜக தலைவர்களின் ஒருவரான நிதின் குப்தா துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய தீபாவளி சிக்கலாகி விட்டது. சஹரான்பூர் மாவட்ட பொறுப்பாளரும் செய்தித்தொடர்பாளருமான இவர் நவம்பர் 15 இல் தன் வீட்டு மாடியில் நின்று துப்பாக்கியால் குண்டுகளை மழை பொழிந்துள்ளார்.

இத்துடன் அந்த தவறை விடீயோவிலும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி பெருமை அடித்துள்ளார். தகவலறிந்த, உ.பி.யின் பாஜக தலைமை வேறுவழியின்றி நிதின் குப்தா மீதான நடவடிக்கைகான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சஹரான்பூர் மாவட்ட காவல்துறை சார்பிலும் நிதின் குப்தா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அவர் பயன்படுத்திய துப்பாக்கியின் அரசு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தமுறை, மாசு காரணமாக டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பிஹார் மாநிலங்களில் தீபாவளிக்கானப் பட்டாசுகள் வெடிக்கத்
தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், உ.பி.யில் வழக்கம் போல் எந்த தடையும் இன்றி பட்டாசுகள் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

எனினும், பட்டாசுகளுக்கு பதிலாக துப்பாக்கி குண்டுகள் வெடித்திருப்பது பாஜக தலைவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்களினால் பொது விழாக்களில் பல உயிர்கள் பலியாகி விடுவதும் உண்டு.

திருமண விழாகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடுகளில் மணமகள் அல்லது மணமகன் பலியான சம்பவங்களும் உ.பி.யில் உண்டு. இதனால், பொது இடங்களில் துப்பாக்கிகளை தவறாகப் பயன்படுத்த உ.பி.யில் தடை விதிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x