Published : 26 Nov 2020 12:18 PM
Last Updated : 26 Nov 2020 12:18 PM

டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி

புதுடெல்லி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் இன்று டெல்லி சலோ போராட்டம் நடத்துவதால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி வருவதை தடுக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மூன்று வேளாண் சட்டங்களுக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று (நவம்பர் 26) தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக 'டெல்லி சலோ' பேரணிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இப்போராட்டம் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சண்டிகர்- டெல்லி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் தேசிய தலைநகருக்குச் செல்ல தங்கள் கிராமங்களிலிருந்து நேற்றே புறப்பட்டனர்.

மாநிலத்தில் விவசாயிகளின் போராட்ட அழைப்புக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக முதல்வர் மனோகர் லால் கட்டாரின் அறிவுறுத்தலின்படி சில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு டெல்லி நோக்கி சென்றனர். அம்பாலாவில் திரண்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது தடுப்புகளை ஆற்றில் தள்ளியும், தடி மற்றும் கற்களை வீசியும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து தண்ணீரை பீச்சியடித்தும், தடியடி நடத்தியும் அவர்களை போலீஸார் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x