Published : 26 Nov 2020 07:13 AM
Last Updated : 26 Nov 2020 07:13 AM

கரையை கடந்தது நிவர் புயல்: கடலூரில் கொட்டித் தீர்த்த கனமழை

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை

புதுடெல்லி

நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது. இதனிடையே நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிக்குள் கடலூரில் 22 செ.மீ மழை பெய்துள்ளது.

அதி தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது.

தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது.

இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. நிவர் தீவிரப் புயல் கரையைக் கடந்த நிலையில் புதுவை மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் ‘‘புதுச்சேரிக்கு வடக்கே இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்தது.

நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிக்குள் கடலூரில் 22 செ.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 18.7 செ.மீ மழையும், காரைக்காலில் 8.4 செ.மீ மழையும், சென்னையில் 8.9 செ.மீ மழையும், நாகையில் 6.2 செ.மீ மழையும் பெய்துள்ளது.’’ எனக் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x