Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

கரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிச.4-ல் புனே பயணம்

புனே

கரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக 100 நாடுகளின் தூதர்கள், பிரதிநிதிகள் மகாராஷ்டிராவின் புனே நகருக்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி செல்கின்றனர்.

இந்தியாவில் 7 மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகின்றன. இதில் மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட் முன்வரிசையில் உள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியை செரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் பரிசோதித்து, உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு 'கோவிஷீல்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 2 முறை போட வேண்டிய தடுப்பூசியாகும். 90 சதவீதம் பலன் அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியை பெறுவதற்கு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

வரும் 2021-ம் ஆண்டில் 300 கோடி 'கோவிஷீல்டு' தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய செரம்இன்ஸ்டிடியூட் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 50 சதவீதம் இந்தியாவுக்கும் 50 சதவீதம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

புனே நகரை சேர்ந்த மற்றொரு மருந்து உற்பத்தி நிறுவனமான ஜெனோவா பயோ பார்மா, அமெரிக்காவின் எச்.டி.டி. பயோ இன் நிறுவனத்துடன் இணைந்து கரோனா தடுப்பூசியை தயாரித்துபரிசோதனை செய்து வருகிறது.

அமெரிக்காவின் பைசர், மாடர்னா நிறுவனங்களின் கரோனாதடுப்பூசி மாதிரியை பின்பற்றி ஜெனோவா பயோ பார்மாவின்தடுப்பூசி தயாரிக்கப்படுவதால் சர்வதேச அளவில் இந்த தடுப்பூசியின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்த பின்னணியில் செரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஜெனோவா பயோ பார்மா நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகளை பெறுவது தொடர்பாக 100 நாடுகளை சேர்ந்த தூதர்கள், பிரதிநிதிகள் வரும் டிசம்பர் 4-ம் தேதி புனேவுக்கு செல்கின்றனர். அவர்கள் இரு நிறுவனங்களின் ஆலைகளுக்கும் சென்று கரோனா தடுப்பூசி உற்பத்தியை பார்வையிட உள்ளனர்.

பிரதமர் மோடி புனே பயணம்?

புனே மாநகராட்சியின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சுரப் ராவ் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடியும் புனே நகருக்கு விரைவில் வருகை தருவார் என்று எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடி புனேவுக்கு வருகை தந்தால் செரம் இன்ஸ்டிடியூட், ஜெனோவா பயோ பார்மா நிறுவனங்களுக்கு செல்வார். கரோனா தடுப்பூசிகளின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்வார்" என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனா தடுப்பு மருந்துகளை சேமித்து வைக்க தேவையான குளிர்சாதன கிடங்குகளை அமைக்குமாறு முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கினார். நாட்டின் 130 கோடி மக்களுக்கும் கரோனா தடுப்பூசியை போட பிரதமர் நரேந்திர மோடி அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x