தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்: கரோனா தடுப்பில் மாநிலங்களுக்கு மத்திய அரசு பரிந்துரை

தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்: கரோனா தடுப்பில் மாநிலங்களுக்கு மத்திய அரசு பரிந்துரை
Updated on
1 min read

தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில், கரோனா பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 1 முதல் பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலம் என்பதால் கரோனா தொடர்ந்து பரவிவரும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைத்தலில் தீவிரம் காட்டுதல், கரோனா தடுப்பு பழக்கவழக்கங்களை மக்கள் கடைபிடிக்கச் செய்வதில் உறுதியாக இருத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பின்பற்றலாம்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் மக்கள் மெத்தனம் காட்டாமல் இருக்க மாநிலங்கள் கூடுதல் அபராதங்களை விதித்துக் கொள்ளலாம்.

கரோனா நோயாளிகளைக் கண்டறிதல், அவர்களைத் தனிமைப்படுத்துதல், தேவைக்கேற்ப வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்துதல் போன்றவற்றை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் சுணக்கமின்றி நடைமுறைப்படுத்தவ் வேண்டும், எனத் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் டிசம்பர் 1 தொடங்கி 31-ம் தேதிவரை அமலில் இருக்கும்.

இருப்பினும் முழு ஊரடங்கு அமல்படுத்தக் கூடாது. மத்திய அரசின் அனுமதியின்றி அதை செயல்படுத்த இயலாது எனத் தெரிவித்துள்ளது.
உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை, இந்தியாவில் 1.34 லட்சம் பேர் கரோனாவால் இறந்துள்ளனர். தினமும் 45,000 பேருக்கு தொற்று ஏற்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in