நிதிஷ் ஆட்சியைக் கவிழ்க்க  சிறையில் இருந்துகொண்டே லாலு பிரசாத் யாதவ் சதி:  சுஷில் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

சுஷில் மோடி
சுஷில் மோடி
Updated on
1 min read

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்தாலும் நிதிஷ் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பாஜகவின் மூத்த தலைவர் சுஷில் மோடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பிஹாரில் கடந்த நவம்பர் 16 அன்று முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மாநில அரசு பதவியேற்றது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று நாட்களே ஆன நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் எதிர்க்கட்சிகள் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக ராஜினாமா செய்தார்.

தற்போது பிஹாரில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 நாட்களே ஆன நிலையில் நிதிஷ் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்யப்பட்டு வருவதாக பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான சுஷில் மோடி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷில் மோடி கூறியுள்ளதாவது:

மாட்டுத் தீவன மோசடி வழக்குகளில் சிறைதண்டனை பெற்றுவரும் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்தபடியே செல்போன் மூலம் எம்எல்ஏக்களை அணுகி வருகிறார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியை ஆட்சி அதிகாரத்தில் அமரவைப்பதற்காக நிதிஷ் ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டத்தை சிறையில் இருந்தபடியே சதித்திட்டம் தீட்டி வருகிறார் லாலு பிரசாத் யாதவ்.

இவ்வாறு சுஷில் மோடி தெரிவித்தார். பாஜகவின் மூத்த தலைவர் சுஷில் மோடி குற்றஞ்சாட்டியுள்ளது பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in