Published : 25 Nov 2020 09:56 AM
Last Updated : 25 Nov 2020 09:56 AM

‘‘காங்கிரஸுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்; கட்சியின் தூண்’’ - அகமது படேல் மறைவுக்கு சோனியா காந்தி, ராகுல் இரங்கல்

காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் மறைவுக்கு கட்சித் தலைவர் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி. அகமது படேல்(71). கடந்த அக்டோபர் 1-ம் தேதி கரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கரோனாவிலிருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில் குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் அகமது படேல் உடல்நிலை சீராக இருந்தது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அகமது படேல் தொடர்ந்து இருந்து வந்தார்.
கரோனாவில் பாதிக்கப்பட்ட அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல்உறுப்புகளும் பரவியதால்தான் அவரின் உடல்நிலை மோசமடைந்தது.

இந்தநிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘ஈடுசெய்ய முடியாத நண்பர் அகமது படேலை இழந்துவிட்டேன். விசுவாசமுள்ள தொண்டரை இழந்துவிட்டேன். தனது முழு வாழ்க்கையையும் காங்கிரஸுக்கு அர்ப்பணித்தவர். அகமது பட்டேல் மறைவால் துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இது ஒரு சோகமான நாள். அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார். சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அகமதி படேலின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அகமது படேல் மறைவுக்கு பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அகமது படேல் அவர்கள் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, எனக்கு அப்போது நல்ல ஆலோசனைகள் வழங்கக் கூடிய நண்பராகவும் விளங்கினார். அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், மல்லிகார்ஜூன கார்கே எம்பி, அபிஷேக் சிங்வி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x