Published : 24 Nov 2020 07:03 PM
Last Updated : 24 Nov 2020 07:03 PM

கரோனா தடுப்பு மருந்து; பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்: விஜய் ரூபானி

கரோனா தடுப்பு மருந்து வந்தவுடன் பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் நிலவரம் மற்றும் தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்கான முதல்வர்களுடனான உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தலைமை தாங்கினார்.

அதிக கவனம் தேவைப்படும் எட்டு மாநிலங்களான ஹரியாணா, டெல்லி, சத்தீஸ்கர், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவற்றின் மீது இந்த கூட்டத்தின் போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. கோவிட்-19 தடுப்பு மருந்து விநியோகம் மற்றும் வழங்குதலுக்கான வழிமுறைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதல்வர்கள்
மாநிலங்களின் களநிலவரம் குறித்த விரிவான தகவல்களை முதல்வர்கள் அளித்தனர். அதிகரித்து வரும் பாதிப்புகள், கொவிட்டுக்குப் பிந்தைய சிக்கல்கள், பரிசோதனைகளை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மாநிலங்களின் எல்லைகளில் நடத்தப்பட்டுவரும் பரிசோதனைகள், வீடு வீடாக சென்று பரிசோதனை செய்தல், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், முகக் கவசம் அணியும் பழக்கத்தை அதிகப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை குறித்து விவரித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறியதாவது:
கரோனா தடுப்பு மருந்து வந்தவுடன் முதலில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கே முதல்கட்டமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். 2-ம் கட்டமாக காவல்துறை மற்றும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கு 3 கட்டமாக வழங்கப்படும். மற்ற பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x