Published : 24 Nov 2020 03:31 PM
Last Updated : 24 Nov 2020 03:31 PM

‘நிவர்’ புயல்; எங்கெங்கு கனமழை பெய்யும்; என்ன பாதிப்புகள் ஏற்படும்? - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தம், ‘நிவர்’ புயலாக தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தம், ‘நிவர்’ புயலாக தீவிரமடைந்துள்ளது. இது மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே நவம்பர் 25ம் தேதி மாலை தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தம், கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் தென் மேற்கு வங்காள விரிகுடாவில், புதுச்சேரிக்கு கிழக்கு- தென் கிழக்குதிசையில் 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ தொலைவிலும் ‘நிவர்’ புயலாக மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், இது மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் எனத் தெரிகிறது. மாமல்லபுரம் காரைக்கால் இடையே நவம்பர் 25ம் தேதி மாலை, தீவிர புயலாக இது கரை கடக்கும். அப்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரகை்கால் பகுதியில் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை, பரவலாக இடியுடன் மழை பெய்யும். இதேபோல் ஆந்திர பிரதேசத்தின் தெற்கு கடலோரம், ராயலசீமா ஆகிய பகுதிகளில் 25ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், தெலங்கானாவில் 26ம் தேதி முதல் 27ம் தேதி வரையும், இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஒரு சில இடங்களில் (புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 24-ம் தேதியும், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு முதல் அரியலூர் வரை, பெரம்பலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 25-ம் தேதியும் தீவிர கனமழை பெய்யும். தெலங்கானாவில் 26ம் தேதி தீவிர கனமழை பெய்யும்.

நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில். நவம்பர் 25ம் தேதி காலையிலிருந்து அடுத்த 18 மணி நேரத்துக்கு 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், நவம்பர் 25ம் தேதி காலையில் இருந்து இரவு வரை மணிக்கு 80 முதல் 100 கி.மீ வரை காற்று வீசும்.

தெற்மேற்கு வங்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். தமிழகம், புதுச்சேரியின் வடகடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் பகுதிக்கு அருகே 1 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் எழும்.

எதிர்பார்க்கப்படும் பாதிப்பு மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கை:

* குடிசை வீடுகள் பலத்த சேதமடையும், உலோக தகடுகள் பறக்கலாம்.

* மின் மற்றும் தொலை தொடர்பு வயர்கள் பாதிப்படையலாம்.

* பாதுகாப்பற்ற வீடுகள் சேதமடையும். சாலைகள் சேதமடையும். சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்.

* மரங்கள் முறியலாம், வேரோடு சாயலாம். வாழை, பப்பாளி, தோட்டக்கலை பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்படும்.

* கடலோர மாவட்டங்களில் பயிர்கள் சேதமடையும்.

* நீர் தேங்கங்களின் கரைகள், உப்பளங்கள் சேதமடையும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x