Last Updated : 24 Nov, 2020 01:50 PM

 

Published : 24 Nov 2020 01:50 PM
Last Updated : 24 Nov 2020 01:50 PM

கரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டுவர செயற்குழு அமைப்பு: பிரதமரிடம் மகாராஷ்டிரா முதல்வர் தகவல்

மகாராஷ்டிராவில் சரியான நேரத்தில் கரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டுவர செயற்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கரோனா நிலவரம் குறித்து டெல்லி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், கேரளா, ராஜஸ்தான், உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது பேசிய மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, "ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராஜெனிகா மருந்து நிறுவனங்கள் இணைந்து கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளன. இந்தத் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது.

ஆகவே, சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூணாவாலாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறேன்.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு அவசரகால அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்போது அதனை உடனடியாகப் பெற்று மகாராஷ்டிராவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து தடுப்பூசி வழங்குதலை ஒருங்கிணைக்க செயற் குழுவை அமைத்துள்ளோம்" என்றார்.

முன்னதாக நேற்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தனது ட்விட்டரில், கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையின் இடைக்கால முடிவின்படி 70.4% பயனளித்துள்ளது. தடுப்பூசியை இரண்டு தவணையாக செலுத்தியபோது 90% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என நம்பிக்கை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி அங்கு 82.915 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,172 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 1 லட்சத்து 79 ஆயிரத்து 237 பேர் தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x