தொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன்

தொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன்
Updated on
1 min read

பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது மோசமான யோசனை என ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

கடந்த வாரம், தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை வழங்கியது.

வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்த பிறகு பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையின்படி வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வங்கி சேவையை தொடங்க முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

"பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது மோசமான யோசனை. இது, ஒரு சில கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதார அரசியல் அதிகாரத்தை குவிக்க வழிவகுக்கும். நிறைய வங்கிகளைத் திறப்பது அரசாங்கத்துக்கு அவசியமானது என்றாலும் தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிப்பது என்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வங்கிகள் தரக்குறியீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸும் ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in